கடந்த சட்டசபை தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஜெயக்குமார், 9,693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னர், தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அவர், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். இதற்கிடையே, பெருந்துறை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம், ஜெயக்குமாரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ஜெயக்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தோப்பு வெங்கடாசலம் தொடர்ந்த தேர்தல் வழக்கில் சட்டப்படி ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்கள் எதுவும் இல்லை என நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, ஜெயக்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தோப்பு வெங்கடாசலம் தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார். இதனிடையே, தோப்பு வெங்கடாசலம் சமீபத்தில் திமுகவில் இருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.