தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதியின் வரலாறு தொடர்பான பகுதியில் இடம்பெற்றிருந்த முக்கியத் தலைவர்களின் பெயர்கள் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சமூக நீதி தொடர்பான விவகாரங்களில் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் இயக்குநர் அமீர், பெரியார், அண்ணா, அம்பேத்கர் ஆகியோரின் பெயர்கள் விடுபட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், பெரியார், அண்ணா, அம்பேத்கர் ஆகியோர் வெறும் தனிநபர்களின் பெயர்கள் அல்ல என்றும், அவர்கள் தமிழ்நாட்டின் அடையாளங்களாக விளங்குகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்களின் பெயர்களை மறைக்கவோ, வரலாற்றிலிருந்து நீக்க முயற்சிக்கவோ எந்த வகையிலான முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், அதற்கு எதிராக தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அமீர் தெரிவித்துள்ளார்.