சேலம் மாநகராட்சி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை மேயர் சாரதா தேவியை 2 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்ததற்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சக மக்கள் பிரதிநிதி என்ற முறையில்கூட கருதாமல், துணை மேயர் சாரதா தேவியின் இருக்கையை மாற்றுவதற்காக மேயர் கவுன்சிலர்களுடன் சென்று நெருக்கடி அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.தனது உரிமையை வலியுறுத்தி மாநகராட்சி மன்ற வளாகத்தில் தரையில் அமர்ந்து முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் துணை மேயரை 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்திருப்பது சர்வாதிகார போக்கை வெளிப்படுத்துவதாகவும் ஜோதிமணி விமர்சித்துள்ளார்.மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் மரியாதையே ஜனநாயகத்தின் அடிப்படை மாண்பாகும் எனக் கூறிய அவர், மாமன்றத்தில் பெண் பிரதிநிதி ஒருவர் இவ்வாறு அவமதிக்கப்படுவதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.மேலும், ஜனநாயகத்துக்கு எதிரான இந்த நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.