மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே மேலையூரில் அமைந்துள்ள காவிரியின் கடைசி கதவணைக்கு காவிரி நீர் வந்து சேர்ந்தது. இதையடுத்து நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர்கள், தானியங்கள் தூவி காவிரி நீரை வரவேற்றனர். காவிரி டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் மேட்டூர் அணையில் நீர்மட்டம் தேவையான அளவில் இல்லாத நிலையில், ஜூன் 12-ஆம் தேதி அணை திறக்கப்படவில்லை. இதற்கிடையில், கர்நாடகாவில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஓரளவு அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் விஜய், கடந்த 1-ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார். மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட நீர் தஞ்சை அருகே உள்ள கல்லணையை சென்றடைந்தது. அங்கிருந்து கடந்த 6-ஆம் தேதி தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த 13-ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காட்டை காவிரி நீர் வந்தடைந்தது. குடகு மலையில் உருவாகும் காவிரி ஆறு பல நூறு கிலோமீட்டர் பயணித்து, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே மேலையூரில் அமைந்துள்ள கடைசி கதவணையான சட்ரஸ் வழியாக பூம்புகார் கடலில் கலக்கிறது. மேட்டூரில் இருந்து திறக்கப்படும் காவிரி நீர் இந்த கடைசி கதவணையை வந்தடைந்த பின்னரே, அதனைத் தேக்கி வைத்து பாசன ஆறுகள் மற்றும் கிளை வாய்க்கால்களுக்கு முறைப்படி தண்ணீர் திறப்பது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் நேற்று மதியம் மேலையூரில் உள்ள கடைசி கதவணையை வந்தடைந்தது. அங்கு நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் படையலிட்டு, மலர்கள் மற்றும் தானியங்களைத் தூவி காவிரி நீரை வணங்கி வரவேற்றனர். நிகழ்ச்சியில் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சங்கர், மேலையூர் நீர்வளத்துறை உதவி பொறியாளர் சண்முகம் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். இந்த கதவணையில் தண்ணீரை தேக்கி வைத்து, பாசன ஆறுகள், கிளை வாய்க்கால்கள் மற்றும் பெருந்தோட்டம் ஏரிக்கு முறைப்படி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் மொத்தம் 3,057 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் பெருந்தோட்டம் ஏரி பாசனத்தின் மூலம் மட்டும் 2,020 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறுகின்றன. தற்போது பெருந்தோட்டம் ஏரிக்கு செல்லும் கிளை வாய்க்கால்கள் மற்றும் மேலையூர் பகுதி வாய்க்கால்களுக்கு காவிரி நீர் வந்தடைந்துள்ளபோதிலும், நீர்வரத்து குறைவாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பாசனத்திற்கு தேவையான அளவு தண்ணீரை முழுமையாக வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர்கள், முறைவைக்காமல் கூடுதல் தண்ணீரை தொடர்ந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.