புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த 40 வயதுடைய சேஷஷைலாஷன் என்பவரை கோரிமேடு போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தலைமை செயலகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோரிமேடு போலீசார் சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கினர். தலைமை செயலக வளாகம் மற்றும் அங்குள்ள அலுவலகங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதனால், விடுக்கப்பட்ட மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, மிரட்டல் விடுத்தது தொடர்பாக சென்னையை சேர்ந்த சேஷஷைலாஷனை போலீசார் கைது செய்தனர். அவர் எதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.