புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் கொம்யூன் பகுதியில் உள்ள இடையார்பாளையம்–ஞானமேடு பகுதியில் அமைந்துள்ள 6 கோவில்களில் ஒரே நாளில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இப்பகுதியில் பிரசித்தி விநாயகர் கோவில், எல்லையம்மன் கோவில், கங்கையம்மன் கோவில், ஜலகண்டேஸ்வரர் கோவில், அய்யனாரப்பன் கோவில் மற்றும் வீரன் கோவில் ஆகியவை அமைந்துள்ளன. இந்த 6 கோவில்களுக்கும் ஒரே நாளில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 15-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அன்று மாலை முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து 16-ம் தேதி புதன்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜையும், மாலை மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான நான்காம் கால யாக பூஜை இன்று காலை நடைபெற்றது. இதையடுத்து காலை 8 மணியளவில் அய்யனாரப்பன் மற்றும் வீரன் கோவில்களில் முதலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பிரசித்தி விநாயகர், ஜலகண்டேஸ்வரர் கோவில்களிலும், பின்னர் கங்கையம்மன் மற்றும் எல்லையம்மன் கோவில்களிலும் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னாள் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைமை நிர்வாகக் குழு தலைவர் கணபதி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.