தமிழ்நாட்டிற்கு புதிய சட்டமன்றம் அமைக்க வேண்டும் என்பதே பா.ம.க.வின் கருத்து என அக்கட்சியின் எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “தமிழ்நாட்டிற்கு அனைத்து வசதிகளும் கொண்ட புதிய சட்டமன்றம் தேவை. அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அது அமைக்கப்பட வேண்டும். அதிகாரிகளுக்கான அலுவலகங்கள் மற்றும் அவர்களது குடியிருப்புகளும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். இதுபோன்ற முழுமையான நிர்வாக வளாகமாக அல்லது நிர்வாகநகரமாக புதிய சட்டமன்றம் அமைந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது சென்னையே மாநிலத்தின் தலைமையிடமாக உள்ளது. புதிய சட்டமன்றத்தை சென்னைக்கு அருகிலும் அமைக்கலாம். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மக்கள் அங்கு வந்து செல்ல வேண்டியிருக்கும் என்பதால், அதற்கு ஏற்ற வகையில் திட்டமிட்டு புதிய சட்டமன்றத்தை அமைக்க வேண்டும்” என்றார்.