பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக தொலைநோக்குப் பார்வையுடனும், தொடர்ந்து மேற்கொள்ளும் உழைப்புடனும் பிரதமர் மோடி செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சர்வதேச அளவில் இந்தியாவின் பெருமையையும் வலிமையையும் உயர்த்தி வருவதாகத் தெரிவித்து, பிரதமருக்கு தனது இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ‘வளர்ந்த பாரதம்’ என்ற இலக்கை நோக்கி, நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு பிரதமர் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். அவரது பொதுவாழ்வுப் பணி மேலும் சிறக்க வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல்நலத்துடனும், மனநிறைவுடனும் தொடர்ந்து நாட்டுக்கு சேவையாற்ற இறைவன் அருள வேண்டும் எனவும் அவர் பிரார்த்தனை செய்துள்ளார்.