மும்பையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்குள் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்ததாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மும்பை ஜியோ உலக மையத்தில் இன்று மாலை நடைபெற உள்ள உலகளாவிய நிதி தொழில்நுட்ப விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இதையொட்டி நிகழ்ச்சி நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சூழலில், நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு அருகிலுள்ள நீதா முகேஷ் அம்பானி கலாசார மையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த இருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களில் ஒருவர் ரோகன் பரேக் (24) என தெரியவந்தது. பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றுவதாக கூறிய அவர், அதற்கான அடையாள அட்டையையும் போலீசாரிடம் காண்பித்துள்ளார். அவருடன் இருந்த மற்றொரு நபர், ரோகன் பரேக்கின் மெய்க்காப்பாளர் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ரோகன் பரேக் காண்பித்த அடையாள அட்டையை போலீசார் ஆய்வு செய்தபோது, அது போலியானது என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். மெய்க்காப்பாளர் என கூறிய நபரிடம் இருந்து துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் போலி அடையாள அட்டையுடன் துப்பாக்கி வைத்திருந்த இருவர் நுழைந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் மும்பை குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களிடம் இருந்த செல்போன்கள், அடையாள ஆவணங்கள் உள்ளிட்ட உடைமைகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.