மலை மற்றும் குறிஞ்சி நிலப்பரப்பை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘தி டார்க் ஹெவன்’ வரும் செப்டம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை இயக்குனர் பாலாஜி இயக்கியுள்ளார். கோதை எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எம்.எஸ். சுவிஸ் பிலிம் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், சமூகத்தில் நிலவும் ஒரு நாட்டார் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமான சித்து சித் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் அறிமுகமான தர்ஷிகா கதாநாயகியாக நடித்துள்ளார். ரித்விகா, நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, சாப்ளின் பாலு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலைக் கிராமம் ஒன்றில் அடுத்தடுத்து நடைபெறும் மர்மக் கொலைகளும், அவற்றின் பின்னணியை கண்டறிய போலீசார் மேற்கொள்ளும் விசாரணையும் படத்தின் பிரதான கதையாக அமைந்துள்ளதாக இயக்குனர் பாலாஜி தெரிவித்துள்ளார். கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன என்பது இறுதியில் எதிர்பாராத திருப்பமாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வண்டிப்பெரியார், அச்சன்கோவில், தென்மலை, ஏற்காடு, பத்துகாணி, தென்காசி, முக்கூடல் உள்ளிட்ட இயற்கை எழில் நிறைந்த சவாலான மலைப்பகுதிகளில் நடைபெற்றுள்ளது. மேலும், திருநெல்வேலி, ராமநாதபுரம், குற்றாலம், முக்கூடல், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை அதிகம் படமாக்கப்படாத இடங்களையும் தேர்வு செய்து படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. கொலை மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் துப்பறியும் விசாரணையை மையமாகக் கொண்ட இப்படம் செப்டம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தனது முதல் திரைப்படம் என தெரிவித்துள்ள நடிகை தர்ஷிகா, த்ரில்லர் படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், இந்தப் படமும் ரசிகர்களுக்கு பிடித்தமான படமாக இருக்கும் என நம்புவதாகவும் கூறியுள்ளார். படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்துள்ளதால், வரும் 18-ம் தேதி திரையரங்குகளுக்கு வந்து படத்தை பார்த்து ஆதரவு அளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.