மதுரை ஐஸ்வர்யம் அறக்கட்டளை சார்பில் பிரபல பின்னணி பாடகர் மனோவின் இசைப் பயணத்தின் 40 ஆண்டுகளை கொண்டாடும் “அந்தியில கானம்” பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி மதுரை காந்தி மியூசியம் அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான இசை ரசிகர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை ரசித்ததுடன், அரங்கம் முழுவதும் கரகோஷமும் கைதட்டல்களும் ஒலித்தன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ள பாடகர் மனோ, தனது பிரபலமான திரைப்படப் பாடல்களை தொடர்ந்து பாடி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். ஒவ்வொரு பாடலும் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. பலரும் பாடல்களுடன் இணைந்து பாடியதோடு, கைதட்டி, உற்சாகக் குரல் எழுப்பி கொண்டாடினர். இந்த இசை நிகழ்ச்சியில் முன்னணி பாடகர்களான தவசீலி, பிரியங்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களது இனிமையான குரலால் இசை விருந்தை மேலும் சிறப்பித்தனர். பல்வேறு காலகட்டங்களில் பிரபலமான மெலோடி, காதல், நாட்டுப்புறம், துள்ளல் மற்றும் பக்திப் பாடல்கள் என பல்வேறு இசை வடிவங்கள் மேடையில் ஒலித்ததால், அனைத்து வயதினருக்கும் நிகழ்ச்சி விருந்தாக அமைந்தது. நிகழ்ச்சியை தனது தனித்துவமான நகைச்சுவை கலந்த பேச்சாலும், ரசிகர்களுடன் நேரடியாக உரையாடும் பாணியாலும் அறியப்படும் மதுரை மாப்பு ஆன்டிரூஸ் தொகுத்து வழங்கினார். அவரது சுறுசுறுப்பான தொகுப்பால் நிகழ்ச்சி தொடக்கம் முதல் நிறைவு வரை ரசிகர்களின் கவனம் மேடையிலேயே நிலைத்திருந்தது. இந்த மாபெரும் இசை நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கொடை வள்ளல் ரவி முருகையா முழுமையான பொறுப்புடன் மேற்கொண்டார். நிகழ்ச்சியின் ஒவ்வொரு அம்சமும் திட்டமிட்டு சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்ததால், ரசிகர்கள் எந்த சிரமமும் இன்றி நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, ரவி முருகையாவின் “தாய் மண்ணே 2.0” என்ற வீடியோ பாடல் வெளியிடப்பட்டு திரையிடப்பட்டது. பாடல் ஒளிபரப்பானபோது ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்று கைதட்டலால் அரங்கையே அதிரவைத்தனர். நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பாடகர் மனோவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். அவர்களில் பட்டிமன்றப் புகழ் ராஜா, VMK நிறுவன தலைவர் ஹரிஹரூன், வ.உ.சி. அவர்களின் பேரன் சிதம்பரம், TVMK சரவண செல்வம், திருப்பரங்குன்றம் அறங்காவலர் சண்முகசுந்தரம், நடிகர் சென்றாயன் உள்ளிட்ட பலர் மேடையில் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியின் போது முக்கிய விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இசைத்துறைக்கும் சமூகப் பணிகளுக்கும் அவர்கள் ஆற்றி வரும் பங்களிப்பை பாராட்டி சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது. இசை நிகழ்ச்சி இரவு நேரம் வரை உற்சாகமாக நீடித்தது. இரவு 10 மணியைக் கடந்த பின்னரும் ரசிகர்கள் அரங்கை விட்டு வெளியேறாமல் நிகழ்ச்சியை தொடர்ந்து ரசித்தனர். இறுதியில் பாடகர் மனோ மற்றும் மற்ற பாடகர்களுடன் ரசிகர்கள் ஆர்வமுடன் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். VMK திரு.R.V.ஹரிஹருன் அவர்கள் ஏற்பாட்டில் தினத்துளிர் சார்பாக RM லேண்ட் புரமோட்டர்ஸ் சார்ந்த லீடர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஏராளமான பொதுமக்களும் சிறுவர் சிறுமிகளும் நிகழ்ச்சியை ஆரவாரம் செய்து கண்டுபிடித்தனர் மதுரையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடைபெற்ற இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி, இசை ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்ததுடன், கலை நிகழ்ச்சிகளுக்கு மக்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருவதையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்தது.