பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்நாட்டுக் குழப்பங்களும், ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தலும் தொடர்ந்து நீடித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கலாட் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் பலூச் கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த 12 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்த ஆயுதக் கிடங்குகளும் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பாக் நகரில் உள்ள காவல் நிலையம் மற்றும் அரசு அலுவலகங்களை 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் தாக்கினர். தொடர்ந்து, அந்த நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் அவர்கள் முயன்றனர்.இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் சுமார் 2 மணி நேரம் தீவிரமாக எதிர்த்தாக்குதல் நடத்தினர். இதையடுத்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அங்கிருந்து பின்வாங்கி தப்பியோடினர். இந்த மோதலில் போலீசார் உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.