ஈரோடு மாவட்டம் பவானி அருகே நிலம் தொடர்பான முன்விரோதத்தில் 71 வயது விவசாயி மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, குற்றவாளியை கைது செய்யக் கோரி உயிரிழந்தவரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மயிலம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட போத்தநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் காளநாயக்கர் (71). விவசாயியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரங்கசாமிக்கும் இடையே நீண்ட காலமாக நிலப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வியாழக்கிழமையான இன்று சர்ச்சைக்குரிய நிலத்தை உழுவதற்காக ரங்கசாமி டிராக்டருடன் சென்றுள்ளார். இதைப் பார்த்த காளநாயக்கர் அவரைத் தடுத்து நிறுத்தி, நிலத்தை எப்படி உழ முடியும் எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த ரங்கசாமி, காளநாயக்கர் மீது டிராக்டரை ஏற்றியதாகவும், இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் ரங்கசாமி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பவானி டி.எஸ்.பி. சீதாலட்சுமி தலைமையிலான போலீசார், காளநாயக்கரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டனர். இதனிடையே, ரங்கசாமியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி காளநாயக்கரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக ரங்கசாமி மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.