செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் பழிவாங்கும் நோக்கில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிங்கபெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த வீரா என்ற வீரமுத்துகிருஷ்ணன் (26), அப்பகுதியில் பாஸ்ட் புட் கடை நடத்தி வந்தார். ஒரு கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டுவிட்டு நேற்று அவர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்புவதற்காக வாகனத்தை நிறுத்தியபோது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் அவரை வழிமறித்துள்ளனர். பின்னர் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் வீரமுத்துகிருஷ்ணனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த வீரமுத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செங்கல்பட்டு போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து கொலையில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக நிதிஷ்குமார் (20), ஹரிஷ் (18), சூர்யா (20), ஜெயபால் (20), பரத் (22), சூர்யா (19) ஆகிய 6 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில், சுமார் 6 மாதங்களுக்கு முன்பு சிங்கபெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் வீரமுத்துகிருஷ்ணனால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகவும், அதற்கு பழிவாங்கும் வகையில் தற்போது வீரமுத்துகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.