உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவில் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்குச் செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை முக்கிய வழிகளாக உள்ளன. இதனுடன் பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் மற்றும் மின்இழுவை ரெயில் சேவைகளும் செயல்பட்டு வருகின்றன. மலைப்பகுதியை ரசித்தபடி விரைவாக கோவிலை சென்றடைய முடிவதால், ரோப் கார் சேவையை பயன்படுத்த பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், பழனி வருகை தரும் பக்தர்களுக்கு இந்த சேவை முக்கியமானதாக உள்ளது. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரோப் கார் நிலையத்தில் மாதாந்திரம் மற்றும் ஆண்டுதோறும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணிகளின்போது சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவது வழக்கம்.அதன்படி, பழனி கோவில் ரோப் கார் நிலையத்தில் ஆண்டுப் பராமரிப்புப் பணிகளுக்காக ஜூலை 20-ந்தேதி முதல் 45 நாட்களுக்கு சேவை நிறுத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இதையடுத்து ஜூலை 20 முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன. இந்த நாட்களில் பக்தர்கள் மின்இழுவை ரெயில் மற்றும் படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்குச் சென்றனர்.பராமரிப்பின் ஒரு பகுதியாக புதிய பெட்டிகள் பொருத்துதல், சோதனை ஓட்டம் உள்ளிட்ட புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், வருகிற 12-ந்தேதி முதல் பழனி ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.