புதுச்சேரியில் பட்டப்பகலில் ரவுடி ஒருவர் மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுச்சேரி கருவடிக்குப்பம் கோமாதா கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (32). இவர் மீது 2 கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது பிறந்தநாளான நேற்று ஆனந்த் கருவடிக்குப்பம் சிவாஜி சிலை மற்றும் கிருஷ்ணா நகர் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து 5 மோட்டார் சைக்கிள்களில் 8 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. அந்த கும்பல் ஆனந்தின் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதில் அவர் கீழே விழுந்தார். பின்னர் அவரை சுற்றி வளைத்த கும்பல், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் கிடைத்ததும் லாஸ்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆனந்தின் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், கடந்த ஆண்டு புதுச்சேரி நவீனா கார்டன் பகுதியில் நடைபெற்ற பாஜக பிரமுகர் விக்கி கொலை வழக்கில் ஆனந்த் முக்கிய குற்றவாளியாக இருந்ததாக தெரிகிறது. இதனால் அந்த கொலைக்கு பழிவாங்கும் வகையில் ஆனந்த் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய மர்ம கும்பலை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் கருவடிக்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.