நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற நைனாமலை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் எளிதாக செல்லும் வகையில் ரூ.30 கோடி செலவில் அமைக்கப்பட்ட மலைச்சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து நேற்று இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பக்தர்கள் மலைக்குச் சென்று பெருமாளை தரிசனம் செய்துவிட்டு திரும்பினர்.சேந்தமங்கலத்தில் இருந்து புதன்சந்தை செல்லும் சாலையில் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் வரலாற்றுச் சிறப்புமிக்க நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் இந்த மலைக்கோவில் உள்ளது. இங்கு சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் வழக்கமாக சுமார் 2,500 படிக்கட்டுகளை ஏறிச் சென்று பெருமாள் மற்றும் குவலயவல்லி தாயாரை வழிபடுவது வழக்கம்.மலைப்பாதையில் ஏற முடியாத பக்தர்கள், அடிவாரத்தில் உள்ள பெருமாளையும், அங்கு பக்த ஆஞ்சநேயரையும் தரிசித்துவிட்டு திரும்புவார்கள். இதனால், மலைக்கோவிலில் உள்ள பெருமாளை எளிதில் தரிசிக்க மலைச்சாலை அமைத்து, அதன் வழியாக பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் மூலம், அடிவாரத்தில் இருந்து 7 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.30 கோடி செலவில் மலைச்சாலை அமைக்கும் பணி தற்போது முடிவடைந்துள்ளது.இந்த சாலை வழியாக அரசு பஸ் இயக்க வேண்டும் என கோவில் நிர்வாகத்தினர் சமீபத்தில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலனை சந்தித்து கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மலைச்சாலையை ஆய்வு செய்த பின்னர், பக்தர்கள் பஸ்சில் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.மலைச்சாலை பணி நிறைவடைந்த நிலையில், நேற்று பக்தர்கள் ஆர்வத்துடன் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மலைக்குச் சென்றனர். அங்கு பெருமாளை தரிசனம் செய்துவிட்டு மீண்டும் கீழே திரும்பினர்.நைனாமலை கோவிலில் வருகிற 11-ந் தேதி முதல் 5 வாரங்களுக்கு புரட்டாசி திருவிழா நடைபெற உள்ள நிலையில், மலைச்சாலை வசதி பக்தர்களுக்கு கூடுதல் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது.