நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் வங்கிப் பெட்டகம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து, அதிலிருந்த பணத்தை எடுத்துச் சென்றதாக 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ரசுவா மாவட்டத்தில் உள்ள போடோகோசி ஆற்றுப் பகுதியில் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட அந்த வங்கிப் பெட்டகம், பல கிலோமீட்டர் தொலைவில் தாடிங் மாவட்டத்தில் திரிசூலி ஆற்றின் கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.பெட்டகத்தை கண்டெடுத்த சிலர், அதை உடைத்து உள்ளே இருந்த பணத்தை எடுத்துச் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், 29 பேரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 92.68 லட்சம் நேபாள ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.57 லட்சம் என கூறப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர்களின் வயது 19 முதல் 49 வரை இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் தாடிங் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தப் பணம் எந்த வங்கிக்கு சொந்தமானது, இந்தச் சம்பவத்தில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.இதற்கிடையே, வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்த தங்கக் காதணியை திருடியதாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பெண்ணின் உடலில் இருந்து நகையை அகற்றும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.