நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் தனது உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணம் முழுவதையும் நிவாரண நிதியாக வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.உத்தரப் பிரதேச மாநிலம் பிகாரியா பகுதியைச் சேர்ந்த அர்பாஸ் ஷேக் என்ற அந்த சிறுவன், கடந்த ஓராண்டாக தனது உண்டியலில் சேமித்து வந்த ரூ.4,115-ஐ நேபாள வெள்ள நிவாரணத்திற்காக அளித்துள்ளார். நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மக்கள் எதிர்கொள்ளும் துயரங்களை தொலைக்காட்சியில் பார்த்த அர்பாஸ், அவர்களுக்கு உதவ வேண்டும் என தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.சிறுவனின் இந்த மனிதநேய எண்ணத்தை ஊக்கப்படுத்தும் வகையில், அவரது குடும்பத்தினர் அவரை மாவட்ட கலெக்டர் மகேந்திர சிங் தன்வரிடம் அழைத்துச் சென்றனர். அங்கு தனது உண்டியலை கலெக்டரிடம் நேரடியாக ஒப்படைத்த அர்பாஸின் செயலை மகேந்திர சிங் தன்வர் மனதாரப் பாராட்டினார்.உதவி செய்வதற்கும் கருணை காட்டுவதற்கும் வயது தடையாக இருக்க வேண்டியதில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் சிறுவன் செய்த இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது மனிதநேயத்தைப் பாராட்டி பொதுமக்கள் பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.