நெல்லை மேலப்பாளையத்தில் வீட்டில் 4 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக சமோசா வியாபாரி ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது யூனுஸ் (25), சமோசா வியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு முகமது யூனுசின் வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 4 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து முகமது யூனுசை கைது செய்த போலீசார், கஞ்சாவையும் பறிமுதல் செய்து மேலப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், முகமது யூனுசின் உறவினர் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். சம்பவத்தன்று அவர் 4 கிலோ கஞ்சாவை வீட்டில் வைத்திருக்குமாறும், இரண்டு நாட்களுக்குப் பிறகு வந்து பெற்றுக்கொள்வதாகவும் கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் முகமது யூனுசின் உறவினரையும் போலீசார் தேடி வருகின்றனர்.