நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவியுடன், அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் காதலிப்பதாகக் கூறி பழகி வந்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு, மாணவியை ஆசை வார்த்தைகளைக் கூறி காட்டுப்பகுதிக்கு முருகேசன் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு தனது நண்பர்களான முனீஸ்வரன் மற்றும் சின்னக்குட்டியையும் அவர் வரவழைத்துள்ளார். பின்னர் மூவரும் சேர்ந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு, நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மூவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், வழக்கின் தண்டனை விவரம் இன்று வெளியானது. இதில், சின்னக்குட்டிக்கு மரண தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், முனீஸ்வரனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, தண்டனை பெற்ற மூவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.