உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், ஜூலை 20-ஆம் தேதி பார்லிமென்டை நோக்கி நடைபெறவுள்ள பேரணியை மிகப்பெரிய வெற்றியாக மாற்றுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சோனம் வாங்சுக், நீண்ட நாட்களாக உணவு தவிர்த்ததாலும், உடலில் நீர்ச்சத்து குறைந்ததாலும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், சோனம் வாங்சுக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கரப்பான் பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார். மருத்துவமனையில் இருந்து வெளியிட்டுள்ள தனது செய்தியில், "இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டமாக இந்த இயக்கத்தை பார்க்கிறேன். ஜூலை 20-ஆம் தேதி நடைபெறும் பார்லிமென்ட் பேரணியை அனைவரும் இணைந்து மாபெரும் வெற்றியடையச் செய்யுங்கள்" என்று சோனம் வாங்சுக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி, அவரது மனைவி கீதாஞ்சலி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.