நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடந்த கோர சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் உயிரிழந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் தனியார் கல்லூரி பஸ் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.திருச்செங்கோடு சக்கராம்பாளையம் போயர் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சேகர் – அமுதா தம்பதியின் மகள்கள் நிவேதா (17), தனுஸ்ரீ (13), அபிநயா (12). இவர்களில் நிவேதா பிளஸ்-1 வகுப்பிலும், தனுஸ்ரீ 7-ம் வகுப்பிலும், அபிநயா 6-ம் வகுப்பிலும் படித்து வந்தனர். மூவரும் எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்று வந்தனர்.இவர்களை தினமும் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று, மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவது ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்த அவர்களது சித்தப்பா ரமேஷ்பாபுவின் மகள் சுபிதா என்ற கலைச்செல்வி (19) என்பவரின் வழக்கம்.அதன்படி, நேற்று மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த கலைச்செல்வி, இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்று 3 மாணவிகளையும் அழைத்துக்கொண்டு வீடு திரும்பினார். ராசிபுரம்–திருச்செங்கோடு சாலையில் சக்கராம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே பிரிவு சாலையை கடக்க முயன்றபோது, ராசிபுரத்தில் இருந்து சங்ககிரி நோக்கி வேகமாக வந்த தனியார் கல்லூரி பஸ், அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது.இந்த விபத்தில் கலைச்செல்வியும், அபிநயாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த நிவேதா மற்றும் தனுஸ்ரீ ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர்.இதனால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கல்லூரி பஸ் டிரைவரை தேடும் பணியிலும் ஈடுபட்டனர்.இந்நிலையில், 4 மாணவிகள் உயிரிழந்த இந்த விபத்து தொடர்பாக கல்லூரி பஸ் டிரைவர் பிரவீன் (23) என்பவரை போலீசார்இன்றுகைதுசெய்தனர்.அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், இறப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.