நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்காமல், ராய்ப்பூரைச் சேர்ந்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். டீ குடிப்பதற்காக சில நிமிடங்கள் தாமதமாகியதே தங்களை காப்பாற்றியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 10 முதல் 15 நிமிடங்களுக்கு முன்பாக அந்த இடத்தை கடந்திருந்தாலோ, அங்கு நிற்காமல் விரைவாக புறப்பட்டிருந்தாலோ தாங்களும் வெள்ளத்தில் சிக்கியிருக்க வாய்ப்பிருந்ததாக கூறினர்.சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த நாராயண் சென், தினேஷ் ஓஜா, பிரேம் சிங் ஜகத், யதேந்திர பிரகாஷ் மற்றும் தினேஷ் சிங் தாக்கூர் ஆகிய 5 பேரும் 50 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் கடந்த 22-ந்தேதி வாடகை வாகனத்தில் நேபாளத்துக்கு சுற்றுலா புறப்பட்டுச் சென்றனர்.சுற்றுலாவின் 5-வது நாளான 26-ந்தேதி காலை சுமார் 10 மணியளவில், தாடிங் மாவட்டத்தில் உள்ள மலேகு பகுதியில் சென்றபோது டீ குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு விடுதியில் வாகனத்தை நிறுத்தினர். அப்போது நேபாளத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டு பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.விடுதிக்குள் அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அலறியபடி ஓடுவதைக் கண்டு 5 பேரும் அதிர்ச்சியடைந்தனர். டீ குடிப்பதற்காக வாகனத்தை நிறுத்தியிருந்ததால், அவர்கள் வெள்ளத்தின் பாதையில் சிக்காமல் தப்பினர். தாங்கள் 10 முதல் 15 நிமிடங்களுக்கு முன்பாக அங்கு சென்றிருந்தாலோ அல்லது டீ குடிக்காமல் உடனடியாக புறப்பட்டிருந்தாலோ நிலைமை வேறாக இருந்திருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.வெள்ளம் சூழ்ந்த நிலையில், அந்த 5 பேரும் தொடர்ந்து 2 நாட்கள் தாங்கள் சென்ற வாகனத்திலேயே தூங்கினர். அந்த நாட்களில் வாகனத்துக்குள் இருந்தபடியே வெள்ளத்தின் தீவிரத்தை அச்சத்துடன் பார்த்ததாகவும் அவர்கள் கூறினர்.இந்த இக்கட்டான சூழலில், ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் பெண் பாதுகாப்புப் பணியாளர்கள் அவர்களுக்கு ராக்கி கயிறு கட்டினர். அந்த தருணம் தங்களுக்கு மிகுந்த ஆறுதலை அளித்ததாக 5 பேரும் தெரிவித்தனர்.இதையடுத்து மீட்கப்பட்ட அவர்கள், நேற்று முன்தினம் பாதுகாப்பாக தங்களது வீடுகளுக்குத் திரும்பினர்.