நீட் தேர்வின் அழுத்தம் காரணமாக மேலும் எத்தனை மாணவர்களின் உயிரை இழக்க வேண்டியுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: பல்லாவரத்தைச் சேர்ந்த சாய் அபினவ் என்ற மாணவர், நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட தகவல் தன்னை அதிர்ச்சியடையச் செய்ததாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சாய் அபினவ் ஏற்கெனவே இரண்டு முறை நீட் தேர்வை எழுதியிருந்த நிலையில், மீண்டும் கோச்சிங் சென்டரில் சேர்ந்து தேர்வுக்குத் தயாராகி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், மாணவர் சாய் அபினவ் உயிரை மாய்த்துக்கொண்டிருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். மகனை இழந்து ஈடு செய்ய முடியாத துயரத்தில் இருக்கும் சாய் அபினவின் பெற்றோருக்கு தனது ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், நீட் தேர்வால் இன்னும் எத்தனை குழந்தைகளை இழக்க வேண்டியுள்ளது என கேள்வி எழுப்பிய அவர், குளறுபடிகள் மற்றும் மோசடிகள் நிறைந்ததாகக் கூறப்படும் நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு மேற்கொண்டுவரும் சட்டப் போராட்டத்தை தற்போதைய ஆட்சியாளர்கள் மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்வதற்காக மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை அளிக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.