நைஜீரியாவில் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் 33 கைதிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் பல்வேறு சட்டவிரோத சுரங்கள் செயல்பட்டு வருகின்றன. தங்கம், கனிம வளங்களை வெட்டி எடுக்கும் இந்த சுரங்கள் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் நிலையில் அவற்றை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் நைஜர் மாகாணத்தில் செயல்பட்டு வந்த சட்டவிரோத சுரங்கத்தில் பணியாற்றி வந்த 65 பேரை பாதுகாப்புப்படையினர் நேற்று முன் தினம் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அம்மாகாணத்தில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இதில் 33 பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதிகளை மர்ம நோய் தாக்கியதால் அவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, சிறிய சிறையில் அதிக அளவிலான கைதிகளை அடைத்ததால் பலரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.