தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மெயின் பஜார் பகுதியில், மெத்தை வியாபாரியை காரில் கடத்திச் சென்று நகைகளை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடையநல்லூர் மெயின் பஜாரில் கடை நடத்தி பஞ்சு மெத்தை விற்பனை செய்து வருபவர் சந்தான கிருஷ்ணன் (76). நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் இவர் தனது கடையில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கடைக்கு வந்து தலையணை தொடர்பாக விசாரித்துள்ளார். பின்னர், தனது உறவினர் ஒருவர் உடல்நலக்குறைவால் காரில் இருப்பதாகவும், அவரால் காரில் இருந்து இறங்கி கடைக்கு வர முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். எனவே, அவர் கேட்ட தலையணையை காருக்கு அருகில் வந்து காண்பிக்குமாறு சந்தான கிருஷ்ணனிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய சந்தான கிருஷ்ணன், அந்த இளைஞருடன் அவர் காட்டிய காரை நோக்கிச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சந்தான கிருஷ்ணனை காருக்குள் இழுத்துப் போட்டு கதவை மூடிய மர்ம நபர்கள், அவரை காரில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் கடையநல்லூர் புதிய பஸ் நிலையம் அருகே காரை நிறுத்திய மர்ம நபர்கள், சந்தான கிருஷ்ணன் அணிந்திருந்த 2 சவரன் தங்கச் சங்கிலி மற்றும் தலா 1 சவரன் எடையுள்ள 2 தங்க மோதிரங்களை பறித்துள்ளனர். தொடர்ந்து, அவரை காரில் இருந்து இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தான கிருஷ்ணன் கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும், சம்பவம் நடைபெற்ற மெயின் பஜார் பகுதி மற்றும் மர்ம நபர்கள் காரில் அழைத்துச் சென்ற வழித்தடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் மூலம் சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருகிறது. மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் மெயின் பஜார் பகுதியில் பட்டப்பகலில் வியாபாரி ஒருவர் காரில் கடத்தப்பட்டு நகைகள் பறிக்கப்பட்ட சம்பவம் கடையநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது