தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட லூர்தம்மாள்புரம் அருகேயுள்ள திருவள்ளூர்புரம் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 வீடுகள் முழுமையாக சேதமடைந்தன. தகவலின்படி, அருகிலிருந்த குப்பைகளுக்கு வைக்கப்பட்ட தீ, பலத்த காற்றின் காரணமாக குடியிருப்பு பகுதிக்குப் பரவி வீடுகளை சூழ்ந்தது. தீயில் வீடுகளில் இருந்த அத்தியாவசிய பொருட்கள், மரச்சாமான்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின. ஒரு வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் பல வாகனங்களுடன் விரைந்து சென்று நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.