தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட வியாபார அபிவிருத்தி விநாயகர் சிலை, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. தூத்துக்குடி மாநகர பழைய இரும்பு மற்றும் மோட்டார் பார்ட்ஸ் வியாபாரிகள் சங்கம் சார்பில், மார்க்கெட் பகுதியில் வியாபார அபிவிருத்தி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், நேற்று காலை இறுதிக்கட்ட பூஜைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சிலையை கடலில் கரைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் விநாயகர் சிலை மினி வேனில் ஏற்றப்பட்டு, மேளதாளங்கள் முழங்க தூத்துக்குடியின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து, தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தின் பின்புறம் அமைந்துள்ள கடற்கரைக்கு சிலை கொண்டு வரப்பட்டது. அங்கு மீண்டும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் கிரேன் உதவியுடன் விநாயகர் சிலை கடலில் இறக்கப்பட்டு கரைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.