தூத்துக்குடி அருகே மாமனாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததாக ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட 6 பேரை முத்தையாபுரம் போலீசார் கைது செய்துள்ளனர். முத்தையாபுரம் வேலாயுதநகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி (45). இவரது மகள் வைஷ்ணவிக்கும், மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகனுக்கும் (27) சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது மகளை பார்க்க முனியசாமி மதுரைக்கு சென்றுள்ளார். அப்போது முருகன், தனது மாமனார் முனியசாமியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வைஷ்ணவியை முனியசாமி தூத்துக்குடிக்கு அழைத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன், தனது நண்பர்கள் 5 பேருடன் மதுரையில் இருந்து தூத்துக்குடியில் உள்ள முனியசாமியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தனது மனைவி வைஷ்ணவியை மீண்டும் மதுரைக்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்த அனுப்பி வைக்குமாறு முனியசாமியிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் முருகன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து முனியசாமியை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 6 பேரையும் தேடி வந்தனர். போலீசாரின் தீவிர தேடுதல் நடவடிக்கையில் முருகன் கைது செய்யப்பட்டார். அவருடன் சாயல்குடியைச் சேர்ந்த திருமுருகன் (23), மதுரையைச் சேர்ந்த நல்லமன்னன் (24), அரவிந்த் (25), தீனதயாளன் (22), பெருமாள் (26) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.