திருமணம் செய்து கொள்வது மட்டுமே ஒருவரின் வாழ்க்கையையும் அடையாளத்தையும் தீர்மானிப்பதில்லை என்றும், திருமணம் இல்லாமலும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்றும் நடிகை திவ்யா ஸ்பந்தனா தெரிவித்துள்ளார். தமிழில் வெங்கடேஷ் இயக்கிய ‘குத்து’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்யா ஸ்பந்தனா என்ற ரம்யா. தொடர்ந்து ‘பொல்லாதவன்’, ‘வாரணம் ஆயிரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ரசிகர்களால் ‘சான்டல்வுட் குயின்’ என அழைக்கப்பட்ட அவர், பின்னர் திரையுலகில் இருந்து விலகினார். அதன்பிறகு காங்கிரஸ் கட்சி சார்பில் 2013-ஆம் ஆண்டு மண்டியா நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். பின்னர் அரசியலில் இருந்தும் தற்காலிகமாக விலகியுள்ளார். தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் எதிர்காலம் தொடர்பான கருத்துகளை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளிப்படையாக பகிர்ந்து வரும் திவ்யா ஸ்பந்தனா, தற்போது திருமணம் குறித்து பேசியுள்ளார். திருமணம் என்பது தனது அடையாளத்தை நிர்ணயிக்கும் ஒரே விஷயம் அல்ல என்று கூறிய அவர், திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதிலும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதே முதன்மையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து திவ்யா ஸ்பந்தனா கூறுகையில், திருமணம் மட்டுமே தனது அடையாளத்தை நிர்ணயிக்காது என்றும், திருமணம் இல்லாமலும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்றும் தெரிவித்தார். மேலும், நல்ல நட்பு, ஒத்த சிந்தனை மற்றும் ஆழமான புரிதல் ஆகியவை இருந்தால் திருமணம் சிறந்த முடிவாக அமையும் என்றும் அவர் கூறினார். இருப்பினும், தனக்கு பொருத்தமான நபரை இதுவரை சந்திக்கவில்லை என்றும் திவ்யா ஸ்பந்தனா தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.