திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான இன்று காலை சிம்ம வாகன சேவை நடைபெற்றது. இதையொட்டி, உற்சவர் மலையப்ப சுவாமி யோக நரசிம்மர் அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமியின் திருக்கோலத்தை தரிசிக்க மாட வீதிகளில் அமைக்கப்பட்டிருந்த கேலரிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். கோவில் வளாகத்திலும் பகவானின் உக்கிரமான அவதார திருக்கோலத்தை காண ஏராளமானோர் குவிந்தனர். இந்த நிகழ்வில் திருமலை ஜீயர் சுவாமிகள், திருமலை திருப்பதி தேவஸ்தான வாரிய உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.