அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னர் சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. திருச்செந்தூரில் அமாவாசை, பவுர்ணமி மற்றும் அவற்றுக்கு முந்தைய, பிந்தைய நாட்களில் காலையில் கடல் உள்வாங்குவதும், மாலையில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமான நிகழ்வாக இருந்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை திருச்செந்தூரில் கடல் திடீரென சுமார் 50 அடி தூரம் வரை உள்வாங்கியது. இதனால் கடல் நீர் பின்வாங்கிய பகுதிகளில் பாசி படர்ந்த பாறைகள் வெளிப்படையாகத் தெரிந்தன. கடல் உள்வாங்கியுள்ள சூழலில், பக்தர்கள் பாதுகாப்புடன் கடலில் குளிக்குமாறு கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.