உஸ்பெகிஸ்தானுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் தாஷ்கண்ட் பல்கலைக்கழக ஆண்டு விழாவில் கலந்து கொண்டு திருக்குறளின் சிறப்பை எடுத்துரைத்தார். மேலும், திருக்குறளை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்த்து வெளியிடுவது குறித்தும் ஆலோசனை வழங்கினார். இதற்கு பாஜக முன்னாள் தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், உலகப் பொதுமறையாக போற்றப்படும் திருக்குறளின் சிறப்பை பிரதமர் மோடி உலக அளவில் எடுத்துச் செல்வது பெருமைக்குரிய நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார்.திருக்குறள் குறித்து பேசிய பிரதமர் மோடி, அதனை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்த்து படிப்பதன் மூலம் இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையேயான கலாசார உறவுகளும், இருநாட்டு மக்களிடையேயான பரஸ்பர புரிதலும் மேலும் வலுப்பெறும் என்று தெரிவித்ததாக வானதி சீனிவாசன் கூறியுள்ளார். மேலும், திருக்குறளின் ஆழமான கருத்துகளை உஸ்பெக் மக்கள் எளிதில் புரிந்துகொண்டு அவற்றுடன் தங்களை இணைத்துக் கொள்ள முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் திருக்குறளின் பெருமையை கொண்டு செல்லும் பிரதமரின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.தாம் செல்லும் நாடுகளிலும், நிகழ்ச்சிகளிலும் தமிழ் மொழி, தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழர்களின் வரலாற்றுப் பெருமைகளை தொடர்ந்து எடுத்துரைத்து வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.