விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசுகையில், திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறியதற்கான காரணங்கள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “தமிழக வெற்றிக் கழகத்தை திமுக குறைத்து மதிப்பிட்டதே அதன் தோல்விக்கு முக்கிய காரணம். விஜய் ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியவர் என்று நான் விமர்சித்தேன். ஆனால், அவர் அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கோரவில்லை. மாறாக, காங்கிரஸ் மற்றும் என்னிடம் ஆதரவு கேட்டார். கவர்னர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற நோக்கில் இடதுசாரிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், விசிகவும் தவெகவுக்கு ஆதரவளித்தது. விசிகவில் இருந்து பலர் விலகியதால் கட்சி பலவீனமடைந்துவிட்டது என்றும், அதனால் திருமாவளவன் விஜய்யின் பின்னால் சென்றுவிட்டார் என்றும் சிலர் கூறுகின்றனர். பதவிக்காகத்தான் கூட்டணி மாறியதாகவும் என் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனக்கு பதவி ஆசை இருந்திருந்தால், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறியபோதே நானும் வெளியேறியிருப்பேன். நான் எம்.எல்.ஏ.வாக இருந்திருந்தாலும் அமைச்சர் பதவியை நாடியிருக்க மாட்டேன். எனது நம்பகத்தன்மையை சீர்குலைக்க சிலர் முயற்சி செய்தனர். 2024-ம் ஆண்டிலேயே திமுக கூட்டணியில் இருந்து விசிகவை வெளியேற்ற முயற்சிகள் நடந்தன. ஆனால், கூட்டணி உடைந்துவிடாமல் நான் பார்த்துக்கொண்டேன். திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் நல்லிணக்கம் இல்லை. மதிமுகவை தனிச்சின்னத்தில் போட்டியிட வைத்ததால் அவர்களுக்கு வருத்தம் ஏற்பட்டிருக்காதா? அதேபோல், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கு கூடுதல் தொகுதிகள் ஏன் வழங்கப்படவில்லை? புதிதாக ஒரு கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வந்து, அதற்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கியதுதான் பிரச்சினைக்கு காரணமாக அமைந்தது. விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணியில் இருந்து விலகியதற்கு திமுகவின் அணுகுமுறையே காரணம். கூட்டணி கட்சிகளை திமுக கையாண்ட விதம் தவறாக இருந்தது என்று எந்த நியாயவாதிகளும் பேசவில்லை. உண்மையில் திமுகதான் எங்களை கைவிட்டது. நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறவில்லை. கூட்டணி பாஜக அல்லாத அணியாக இருக்க வேண்டுமெனில், அதன் பெயரில் ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தை இடம்பெற வேண்டும். எனவே, கூட்டணியின் பெயரில் ‘மதச்சார்பற்ற’ என்ற சொல்லை சேர்க்க வேண்டும் என்று விஜய்யிடம் தெரிவித்தேன்” என்று திருமாவளவன் கூறினார்.