சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் பேசிய உரையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆனால், முதல்-அமைச்சரின் உரையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக கீழே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதுடன், கோஷங்களையும் எழுப்பினர்.இதையடுத்து, தனது இருக்கையைச் சுற்றி நின்று தொடர்ந்து முழக்கமிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களை அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். உடனடியாக அவைக் காவலர்கள் அங்கு வந்து, திமுக உறுப்பினர்கள் சிலரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியே அழைத்துச் சென்றனர்.அப்போது, ஒரு உறுப்பினருக்கு உடல்நிலை சரியில்லை என்பதை கவனித்த சபாநாயகர், அவரை அமைதியாக அழைத்துச் செல்லுமாறு அவைக் காவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பேசுகையில், கடந்த சனிக்கிழமை குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து சிகிச்சை பெறுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார்.இருப்பினும், தங்களை அனைவரையும் ஆளாக்கிய முதல்-அமைச்சரின் பதிலுரையை கேட்க வேண்டும் என்பதற்காக சட்டசபைக்கு வந்ததாக அவர் கூறினார். அவையில் நடைபெற்ற சம்பவங்களால் தனது ரத்த அழுத்தம் அதிகரித்ததாகவும், மருத்துவர் தலையீடு இல்லாமலேயே பின்னர் அது இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் தெரிவித்தார்.முதல்-அமைச்சர் விஜய் சட்டமன்ற விதிகளுக்கு புறம்பாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் சபாநாயகர் கூறினார். சட்டசபையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது திமுகவினருக்கு நன்றாகத் தெரியும் என்றும், திமுக உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளைத் தொடர முடியாத வகையில் இடையூறு செய்தால் தன்னால் என்ன செய்ய முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.மேலும், திமுக உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதமே தனக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.