சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு இடதுசாரி கட்சிகளின் ஆதரவு உள்ளது. தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களின் வெற்றிக்காக விசிக ஆதரவு அளிக்கும். இடைத்தேர்தலில் யார் போட்டியிட வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை தவெகவுக்கு உள்ளது. அந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. எந்த வேட்பாளரை ஆதரிப்பது, அவரை வெற்றி பெறச் செய்வது உள்ளிட்ட முடிவுகளை அந்தந்த தொகுதி மக்களே தீர்மானிப்பார்கள். புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட உள்ள பகுதியில் வசிக்கும் மக்களின் நிலைப்பாடு என்ன என்பது தற்போது தெரியவில்லை. அப்பகுதி மக்களின் கருத்துகளையும் தமிழக அரசு கேட்டறிந்து உரிய முடிவை எடுக்கும் என நம்புகிறேன். மிசா கால ஒடுக்குமுறைக்கு ஆளானவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. முதலமைச்சரின் பேச்சு தொடர்பான எனது கருத்தை சமூக வலைதளத்தில் ஏற்கனவே பதிவிட்டுள்ளேன். அந்த விவகாரம் தொடர்பாக தான் தெரிவித்த கருத்து உள்நோக்கத்துடன் கூறப்பட்டதல்ல என்றும், அதனால் யாருடைய மனமும் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார். தவெக தலைமையிலான கூட்டணி அறத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே நாங்கள் இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளோம். இதுதொடர்பாக நாங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறோம். தவெகவுக்கு ஆதரவு வழங்குவதுடன் மட்டும் நின்றுவிடாமல், எங்களது அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் தேவையான வழிகாட்டுதலையும் வழங்குவோம்.