தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே த.வெ.க. நிர்வாகி மீது இரும்புக் கம்பி மற்றும் தடிகளால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில், முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குரும்பூர் அருகேயுள்ள அம்மன்புரம், கீழப்புதுக்குடியைச் சேர்ந்தவர் பீட்டர் (48). த.வெ.க. நிர்வாகியான இவர், அம்மன்புரம் பகுதியில் புதிய வீடு கட்டி வருகிறார். அங்கு அமைந்துள்ள பொதுப்பாதை தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் ஞானராஜ் (65) என்பவருக்கும் பீட்டருக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று அம்மன்புரம் தேவாலயம் அருகே பீட்டர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஞானராஜின் தம்பி மகன் ஆல்வின் (25) உள்ளிட்ட 6 பேர் அவரை வழிமறித்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவர்கள் வைத்திருந்த தடிகள் மற்றும் இரும்புக் கம்பிகளால் பீட்டரை தாக்கி கீழே தள்ளி மிதித்துள்ளனர். அவரது இருசக்கர வாகனத்தையும் அடித்து சேதப்படுத்தியதுடன், கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிகிறது. தாக்குதலில் பலத்த காயமடைந்த பீட்டரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக குரும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஆல்வின், ஞானராஜ் உள்ளிட்ட 6 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே, பீட்டர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.