தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி நடப்பு ஆண்டில் கணிசமாக அதிகரித்துள்ளது. ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில், மாநிலத்தின் காற்றாலை மின் நிலையங்கள் மூலம் 1,044.67 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றாலை மின் கட்டமைப்பில் இந்திய அளவில் குஜராத்துக்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தற்போது மாநிலத்தில் தனியார் நிறுவனங்கள் மொத்தம் 9,527மெகாவாட் நிறுவப்பட்ட திறனில் காற்றாலை மின் நிலையங்களை அமைத்துள்ளன.பொதுவாக மே முதல் செப்டம்பர் வரை காற்றாலை மின் உற்பத்திக்கான முக்கிய காலமாக உள்ளது. எனினும், ஏப்ரல் மாதம் முதலே காற்றாலைகள் மூலம் மின்சாரம் கிடைக்கத் தொடங்கியுள்ளது. நடப்பு சீசனில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், காற்றாலை மின் நிலையங்களில் இருந்து தினசரி சராசரியாக 8 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் காற்றாலை மூலம் 1,011.20 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்திருந்தது. இதனுடன் ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டில் 33 கோடி யூனிட் கூடுதலாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.வரும் நாட்களில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், காற்றாலை மின் உற்பத்தி இன்னும் உயர்ந்து, அதிக அளவை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.