தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைப்பது தொடர்பாக, வரும் 23-ந்தேதி அனைத்து மாவட்டங்களிலும் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்த போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 3.46 லட்சம் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. கடந்த 2013-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின்படி, முதல் 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.25-ம், அதற்கு அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12-ம் வசூலிக்கப்படுகிறது. தற்போதைய சூழலுக்கு ஏற்ப புதிய ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிப்பது குறித்து, அனைத்து மாவட்டங்களிலும் நுகர்வோர் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வரும் 23-ந்தேதி கருத்து கேட்பு கூட்டங்களை நடத்துமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு போக்குவரத்து ஆணையரகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக முற்போக்கு நுகர்வோர் மையத் தலைவர் சடகோபன் கூறுகையில், ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் தொடர்ந்து வர உள்ளதால், ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்கும் பணியை இனியும் தாமதிக்காமல் முடிக்க வேண்டும் என்றார். மேலும், குறைந்தபட்ச கட்டணமாக ரூ.45 நிர்ணயிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் அதிகபட்சம் ரூ.20 வரை கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், அனைத்து ஆட்டோக்களிலும் டிஜிட்டல் மீட்டர் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளை கட்டாயமாக பொருத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.