திண்டுக்கல்:பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் காளியம்மாள் (26). இவரது கணவர் ஜெயசீலன், நில அளவைத் துறையில் சார் ஆய்வாளராக அரசு பணியாற்றி வருகிறார். தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் கணவரைப் பிரிந்து, தனது குழந்தையுடன் அப்பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை அக்கம்பக்கத்தினர் காளியம்மாளை பார்க்க அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது அவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற திண்டுக்கல் மாவட்ட போலீசார், காளியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், காளியம்மாள் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நேரத்தில் அவரது கணவர் ஜெயசீலனின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், தலைமறைவாக உள்ள ஜெயசீலனை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.