டெல்லி மாணவர் போராட்டத்துக்கு ஆதரவாக அன்னா ஹசாரே 2 மணி நேர மவுன விரதம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

23 Jul 2026 www.thinathulir.com

டெல்லி மாணவர் போராட்டத்துக்கு ஆதரவாக அன்னா ஹசாரே 2 மணி நேர மவுன விரதம்

டெல்லி மாணவர் போராட்டத்துக்கு ஆதரவாக அன்னா ஹசாரே 2 மணி நேர மவுன விரதம்

'நீட்' வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து நாடு முழுவதும் எதிர்ப்புகள் தீவிரமடைந்துள்ளன. இந்த விவகாரத்திலும், 'நீட்' தேர்வு தோல்வியைத் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கடந்த 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடைபெற்றது. இதில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றனர். பேரணியை கட்டுப்படுத்தும் நோக்கில் பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தாலும், கூட்டம் அதிகரித்ததால் போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலாக போலீசாரை நோக்கி கல்வீச்சும் நடந்ததாக தகவல்கள் வெளியாகின.போலீசாரின் தடியடியில் காயமடைந்த பல இளைஞர்கள் நாடாளுமன்றம் அருகிலுள்ள ஆர்.எம்.எஸ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் நாடு முழுவதும் அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியும் மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தை தொடங்கியுள்ளது. தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து இளைஞர்கள் டெல்லிக்கு வருவதால், தலைநகரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.இந்த சூழலில், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே இன்று இரண்டு மணி நேர மவுன விரதத்தில் ஈடுபட்டார். மகாராஷ்டிர மாநிலத்தின் அஹில்யாநகரில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அவர் மவுன விரதம் மேற்கொண்டார்.இதற்கு முன், டெல்லி போராட்டத்தில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்னா ஹசாரே கடிதம் எழுதியிருந்தார். அதில், மாணவர்கள் மீது நிகழ்ந்ததாக கூறப்படும் வன்முறை சம்பவங்கள் வேதனை அளிப்பதாக குறிப்பிட்ட அவர், இந்த போராட்டத்தை வெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக பார்க்காமல், சமூகத்தின் வேதனையையும் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கும் நிகழ்வாக அணுக வேண்டும் என்று வலியுறுத்தினார்.மேலும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினாலும் அதனால் அரசாங்கத்திற்கு பாதிப்பு ஏற்படாது என்றும், மாறாக அது பொறுப்புணர்வும் நிர்வாகத் திறனும் கொண்ட ஆட்சியை வெளிப்படுத்தும் நடவடிக்கையாக இருக்கும் என்றும் அன்னா ஹசாரே தெரிவித்தார். போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை பொறுமையுடன் கேட்டு, நம்பிக்கையை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தி, ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார்.