தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். சென்னை மருத்துவக்கல்லூரியில் 192-வது மருத்துவ இளநிலை மாணவர் சேர்க்கை வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் அருண்ராஜ், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் தற்போது சுவாசத் தொற்றுகள் அதிகளவில் பரவி வருவதாகவும், இதைத் தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பொதுமக்களும் உரிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார். அதேபோல், பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிவது அவசியம் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலும் தொடர்ந்து காணப்படுவதாகக் கூறிய அமைச்சர், இந்த ஆண்டு இதுவரை 15,933 பேர் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும், அதில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார். டெங்கு பாதித்தவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முறையான சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.