தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை தொடர்பாக அமைச்சர் விக்னேஷ் 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் டாஸ்மாக் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் விடுமுறை தொடர்பான அறிவிப்புகளும் இடம்பெற்றன.டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்களில் தொடர்ந்து 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஊதியம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.அதன்படி, மேற்பார்வையாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.33,023 ஆகவும், விற்பனையாளர்களுக்கு ரூ.30,284 ஆகவும், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,689 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.டாஸ்மாக் கடைகளில் எம்ஆர்பி விதிமீறல்கள் உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுப்பதுடன், பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் கூறினார்.மேலும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு பண்டிகை முன்பணமாக ரூ.20,000 வழங்கப்படும். ஆண்டுதோறும் 3 சீருடைகளுக்கான துணி மற்றும் தையல் செலவுக்காக ரூ.6,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.இதுதவிர, டாஸ்மாக் நிறுவன ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் 8 மணி நேர பணி ஒதுக்கப்படும். மாதத்திற்கு ஒரு நாள் விடுமுறையும், 2 நாட்கள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பும் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். முதல் முறையாக விதிமீறல் செய்தால் இடைநீக்கம் செய்யப்படுவார்கள்; மீண்டும் அதே தவறை செய்தால் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் விக்னேஷ் கூறினார்.