இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கான அரசுமுறை சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக மால்டோவா, வடக்கு மாசிடோனியா மற்றும் ருமேனியா ஆகிய மூன்று நாடுகளுக்கு அவர் செல்கிறார். சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக நேற்று மால்டோவா சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, அந்நாட்டு ஜனாதிபதி மயா சந்து மற்றும் துணைப் பிரதமர் மைஹை பாப்சொய் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். மால்டோவா பயணத்தை நிறைவு செய்த அவர், சுற்றுப்பயணத்தின் இரண்டாவது கட்டமாக இன்று வடக்கு மாசிடோனியா சென்றடைந்தார். வடக்கு மாசிடோனியாவுக்கு அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொண்ட முதல் இந்திய ஜனாதிபதி என்ற சிறப்பை திரவுபதி முர்மு பெற்றுள்ளார். அங்கு வடக்கு மாசிடோனியா ஜனாதிபதி சில்ஜனொவ்ஸ்கா டவொகாவை சந்தித்த ஜனாதிபதி முர்மு, இருநாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, வர்த்தக ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.