சென்னை கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் சொத்து தொடர்பான தகவல்கள் முழுமையாக தெரிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டபோது தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில், திமுக அறக்கட்டளையின் தலைவர் என்ற விவரமும் அதனுடன் தொடர்புடைய சொத்து தகவல்களும் வெளிப்படுத்தப்படவில்லை என்று மனுதாரர் திருஞானசம்பந்தன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, வேட்புமனுவில் அறக்கட்டளை தொடர்பான விவரங்களை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று ஸ்டாலின் தரப்பில் வாதிடப்பட்டது.இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், சம்பந்தப்பட்ட ஆவணங்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதி வழங்கியது. மேலும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.