சொத்து வரி பெயர் மாற்றத்துக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம்: ஊராட்சி செயலர் உள்பட இருவர் கைது
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

05 Sep 2026 www.thinathulir.com

சொத்து வரி பெயர் மாற்றத்துக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம்: ஊராட்சி செயலர் உள்பட இருவர் கைது

சொத்து வரி பெயர் மாற்றத்துக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம்: ஊராட்சி செயலர் உள்பட இருவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறையை சேர்ந்த விவசாயி ராஜா. இவரது தந்தை பெயரில் இருந்த சொத்து வரியை தனது பெயருக்கு மாற்றுவதற்காக பூம்பாறை ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது பெயர் மாற்றம் செய்வதற்காக ஊராட்சி செயலர் முருகேசன் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அந்த தொகையை வழங்க முடியாது என ராஜா தெரிவித்த நிலையில், பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரூ.4 ஆயிரம் கொடுக்குமாறு முருகேசன் கேட்டுள்ளார்.லஞ்சம் வழங்க விரும்பாத ராஜா, இதுகுறித்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், ஊராட்சி செயலரை லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். இதன்படி, ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரத்தை ராஜாவிடம் போலீசார் கொடுத்து, அதை ஊராட்சி செயலரிடம் வழங்குமாறு அறிவுறுத்தினர். அதன்படி, நேற்று முன்தினம் பூம்பாறை ஊராட்சி அலுவலகத்துக்கு சென்ற ராஜாவை, அலுவலகத்துக்கு வெளியே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்தனர். அப்போது ஊராட்சி செயலர் முருகேசன் மற்றும் தற்காலிக கணினி ஆபரேட்டர் ராஜா சண்முகம் ஆகியோரிடம் ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரத்தை ராஜா வழங்கினார். இதையடுத்து மறைந்திருந்த போலீசார் இருவரையும் பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து லஞ்சப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.