சென்னையில் இருந்து சுமார் 45 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று நேற்று இரவு கோவை நோக்கி புறப்பட்டது. இன்று அதிகாலை சங்ககிரி மேம்பாலம் அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, அதன் முன்னால் சென்ற சரக்கு லாரி திடீரென சாலையோர தடுப்பில் மோதி நின்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பின்னால் வந்த ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் லாரியின் பின்புறத்தில் மோதியது. இந்த மோதலில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. விபத்தில் பேருந்து ஓட்டுநர் உள்ளிட்ட 15 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்தில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.