சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அரிசிபாளையம் பகுதியில், பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் தண்ணீர் தொட்டிக்குள் போடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அரிசிபாளையம் மெயின் ரோடு பகுதியில் பூசாரி ஒருவருக்குச் சொந்தமான வீடு உள்ளது. அந்த வீட்டின் மொட்டை மாடியில் அமைந்துள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து கடந்த சில நாட்களாக துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், இன்று (திங்கட்கிழமை) தண்ணீர் தொட்டியை திறந்து சோதனை செய்தனர்.அப்போது தொட்டிக்குள் ஒரு மூட்டை இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சேலம் மாநகர போலீசாரும், தடயவியல் நிபுணர்களும் விரைந்து வந்தனர். தண்ணீர் தொட்டிக்குள் இருந்த மூட்டையை வெளியே எடுத்த போலீசார், அதைத் திறந்து சோதனை செய்தனர். அதற்குள் பெண்ணின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது.கொலை நடந்து பல நாட்கள் ஆகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், சடலம் மிகவும் சிதைந்திருந்தது. இதையடுத்து போலீசார் உடல் பாகங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த கொலை தொடர்பாக சேலம் மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். உயிரிழந்த பெண் யார் என்பதை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், சமீப நாட்களில் சேலம் மாவட்டத்தில் காணாமல் போன பெண்கள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டு முதற்கட்ட விசாரணை நடத்தப்படுகிறது.கொலையாளியை அடையாளம் காணும் வகையில், அந்த வீட்டின் மொட்டை மாடிக்கு வந்து சென்றவர்கள் யார், அங்கு யாரேனும் தங்கியிருந்தார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.குடியிருப்புகள் நிறைந்த அரிசிபாளையம் பகுதியில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, உடல் பாகங்கள் தண்ணீர் தொட்டிக்குள் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.