சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 3,11,285 தெரு மின் விளக்குகளும் முழுமையாக ஒளிர்வதை உறுதி செய்யும் வகையில், மாநகராட்சி அலுவலர்கள் நேற்று (செப்.16) இரவு முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் 2,079 தெருவிளக்குகள் எரியாமல் இருப்பது கண்டறியப்பட்டு, அவற்றை விரைந்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் சார்பில் சாலைகள், தெருக்கள், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகள், மயானங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தெரு மின் விளக்குகள் மற்றும் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து 3,11,285 தெரு மின் விளக்குகளும் 100 சதவீதம் ஒளிர்வதை உறுதி செய்ய அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் உத்தரவிட்டிருந்தார். இதன்படி, வடக்கு வட்டாரத்தில் இணை ஆணையாளர் (கல்வி), மத்திய வட்டாரத்தில் இணை ஆணையாளர் (சுகாதாரம்), தெற்கு வட்டாரத்தில் இணை ஆணையாளர் (பணிகள்) ஆகியோர் வட்டார பொறுப்பு அலுவலர்களாகவும், 1 முதல் 15-வது மண்டலங்களுக்கான பொறுப்பு அலுவலர்களாக உயர் அலுவலர்களும் நியமிக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, மொத்தமுள்ள 3,11,285 தெருவிளக்குகளில் 2,079 விளக்குகள் எரியாமல் இருப்பது தெரியவந்தது. இதில் மழைநீர் வடிகால், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் ஆகியவற்றின் பணிகள் நடைபெறும் பகுதிகளில் 850 விளக்குகளும், புதை மின்வடம் பழுது காரணமாக 230 விளக்குகளும், 999 எல்இடி விளக்குகளும் எரியாமல் இருந்தன. எரியாமல் இருந்த 2,079 தெருவிளக்குகளையும் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேவைத்துறைகளின் பணிகள் நடைபெறும் இடங்களில் தற்காலிக தெருவிளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. எரியாத 999 எல்இடி விளக்குகளை 24 மணி நேரத்திற்குள்ளும், புதை மின்வடப் பழுது காரணமாக செயல்படாத 230 விளக்குகளை 48 மணி நேரத்திற்குள்ளும் சரிசெய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மரக்கிளைகள் காரணமாக தெருவிளக்குகளின் வெளிச்சம் தடைபடும் இடங்களைக் கண்டறிந்து, வாரந்தோறும் அவற்றை அகற்றவும் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, விளக்குகள் பழுதுபார்க்கப்படும் நேரங்களிலும், பிற நேரங்களிலும் தேவையான இடங்களில் மரக்கிளைகள் அகற்றப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து தெருவிளக்குகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவை 100 சதவீதம் ஒளிர்வதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் தெருவிளக்குகள் எரியாமல் இருப்பது குறித்து பொதுமக்கள் 1913 என்ற மாநகராட்சி உதவி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தகவலை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார்.